இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பரவி வரும் மர்மக் காய்சலால் இதுவரை குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் அதிகளவானோர் சிறுவர்களாவர்.
புதிய வகைக் காய்ச்சலால் பாதிக்கப்படும் பலர் மூட்டு வலி, தலைவலி, நீரிழப்பு மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கால்கள் மற்றும் கைகளில் வீக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேர் இதுவரை இறந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இறந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் எவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலையிலிருந்து இந்தியா மெதுவாக மீண்டு வருவதாகத் தோன்றும் இந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் ஒரே வாரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மர்மக் காய்ச்சல் பரவிவருவதை அடுத்து மருத்துவ வல்லுநர்கள் குழு உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. புதியவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடையே லேசான டெங்கு அறிகுறியும் இருப்பது தெரியவந்தது. ஆனால், டெங்குக்கான மருந்துகளுக்கு மர்ம காய்ச்சல் கட்டுப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.