Tuesday 16th of April 2024 11:18:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது ஒருநாள் போட்டி; அவிஷ்க பெர்னாண்டோ அபார சதம் - தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை!

முதலாவது ஒருநாள் போட்டி; அவிஷ்க பெர்னாண்டோ அபார சதம் - தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை!


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தெடரின் முதலாவது போட்டி பகல் - இரவு ஆட்டமாக நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மினொட் பானுக ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் பானுக 27 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய பானுக ராஜபக்ஷ ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் சேர்ந்த தனஞ்செய டீ சில்வா சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.

79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 137 ஆக உயர்த்திய நிலையில் தனஞ்செய டீ சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அசலங்கவுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ தனது 3வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார்.

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்க பெர்னாண்டோ 115 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு 6 ஒட்டம், பத்து 4 ஓட்டங்கள் அடங்கலாக 118 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அசலங்க 72 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பந்து வீச்சில் ரபாடா, கேசவ் மஹராஜ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

301 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க சீரான ஆட்டத்தை வளிப்படுத்தி வந்த போதிலும் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மர்க்ரம் 98, டௌசன் 59, பவுமா 38, க்லாசன் 36 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் அகில தனஞ்செய 2 விக்கெட்டையும், கருணாரத்ன, ஹசரங்க, ஜெயவிக்ரம ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன் மூலம் 14 ஓட்ங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 : 0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE