நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரான நியூ லினில் உள்ள வணிக வளாகத்தில் இன்று வௌ்ளிக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கி குறைந்தது ஆறு பேரை காயப்படுத்திய நபரை நியூசிலாந்து பொலிஸார் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 6 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஒக்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை அடுத்து வணிக வளாகத்தில் இருந்து பொதுமக்கள் பதறியடித்தக்கொண்டு வெளியே ஓடினர். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிலர் இரத்த வௌ்ளத்தில் வணிக வளாகத்துக்குள் வீழ்ந்து கிடப்பதைக் கண்டதாக தப்பியோடியவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலை அடுத்து அங்கு விரைந்த ஒக்லாந்து பொலிஸார் தாக்குதலாளியை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றனர். பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பவைக்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவரைத் தவிர இந்தத் தாக்குதலுடன் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நிலைமை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
பிரதமரும் நாட்டில் தலைமை பொலிஸ் அதிகாரியும் இணைந்து இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து நிலைமை குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் கடந்த 2019 ஆம் அண்டு மார்ச் 15 – ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இரண்டு மசூதிகளுக்குள் நுழைந்து ஆயுததாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மே மாதத்தில், நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டுனெடினில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து