நியூசிலாந்தில் கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அத்துடன், நாட்டில் டெல்டா திரிபால் ஏற்பட்ட முதல் மரணமாகவும் இது அமைந்துள்ளது.
புதிய கொத்தணித் தொற்று மையமான ஒக்லாந்தில் இந்த மரணம் பதிவானது. அத்துடன், 20 கொவிட் தொற்று நோயாளர்களும் ஒக்லாந்தில் பதிவாகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் 90 வயதானவர் எனவும் அவா் வேறு பல உடல் நலப் பாதிப்புக்களைக் கொண்டிருந்தவர் எனவும் நியூசிலாந்து சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஒரு மரணம் கூட கொவிட் தொற்று நோயின் தீவிரத்தை நினைவூட்டுகிறது என பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
எங்கள் சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வைரஸால் மிகவும் ஆபத்தில் உள்ளனர். இந்நிலையில் தொற்று நோய் மேலும் பரவுவதைத் தடுக்க சமூக முடக்கல் ஒரு முக்கியமான கருவியாகும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒரு டெல்டா வைரஸ் தொற்று நோயாளி கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த மாத நடுப்பகுதியில் உடனடியாக நாட்டை முடக்கி பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டார்.
அத்துடன், தொற்று நோய் தடமறிந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அந்நாடு மிகச் சிறப்பாக முன்னெடுத்தது. இதன் மூலம் அங்கு டெல்டா பரவல் கட்டுக்குள் வரும் போக்கு தென்படுகிறது.
கடந்த சில நாட்களுக்குப் பின்னர் இன்று சனிக்கிழமை அங்கு குறைந்தளவான தொற்று நோயாளர்களே அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டின் மிகப்பெரிய நகரமான ஒக்லாந்தில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். நீண்ட காலத்தின் பின்னர் முதல் தொற்று நோயாளி ஆகஸ்ட் நடுப்பகுதியில் கண்டறியப்பட்டதை அடுத்து அந்நகரம் கடுமையான முடக்க நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் பாடசாாலைகள், அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான நியூசிலாந்து பிரஜைகள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
புதிய கொத்தணித் தொற்றால் பாதிக்கப்பட்ட 782 பேர் தற்போது நியூசிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவாக ஒக்லாந்தில் 765 தொற்று நோயாளர்களும் தலைநகரான வெலிங்டனில் 17 தொற்று நோயாளர்களும் உறுதிப்படுத்தப்பட்டனர்.
ஐந்து மில்லியன் மக்களைக் கொண்ட நியூசிலாந்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மொத்தமாக 27 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), நியூசிலாந்து