சவுதி-அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கும் கிழக்கு பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அத்துடன், அந்தப் பகுதியில் பல கட்டங்கள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாக சவுதி-அரேபிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமாம் நகரில் நிறுவப்பட்ட ஏவுகளைகளை திசை திருப்பும் பொறிமுறையால் இந்த ஏவுகணை தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் ஏவுகணையில் இருந்து சிதறிய துண்டுகள் தாக்கியதில் இரு சிறுவர்கள் காயமடைந்ததாகவும், அப்பகுதியில் உள்ள 14 வீடுகளுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலை ஈரானைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
நாட்டின் தெற்கே அமைந்துள்ள ஜசன் மற்றும் நஜ்ரான் ஆகிய பகுதிகளை நோக்கி வந்த ஏவுகணைகளையும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை மூலம் அழித்ததாகவும் அத்துடன், ட்ரோன் மூலம் இடம்பெறவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் சவுதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முக்கிய எண்ணெய் கிணறுகள் உள்ள கிழக்கு சவுதியில் முன்னதாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, அராம்கோ ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாட்டின் 50 சதவிகித எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.