மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் இராணுவப் புரட்சி மூலம் அந்நாட்டு இராணுவ விசேட படையணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், கினியா ஜனாதிபதி ஆல்பா காண்டே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கினியா தலைநகா் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே நேற்று கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரச தொலைக்காட்சியை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய இராணுவ உயர் மட்டத் தலைவர் மமாடி டம்போயா, ஜனாதிபதி ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா்.
அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு இராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ஆல்பா காண்டே எங்கிருக்கிறார்? அவரது நிலைமை என்ன? என்பது குறித்த எந்தக் கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை.
இதேவேளை, சதிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்த கினியா இராணுவத்தின் இந்த செயல்பாட்டை ஐ.நா. கண்டித்துள்ளது. “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஜனாதிபதியின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சும் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸிடம் இருந்து 1958 -ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று ஜனாதிபதியானார். 3-ஆவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆல்பா காண்டே ஜனாதிபதியாகத் தொடா்ந்தாா்.
கினியாவின் ஆல்பா காண்டே ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நாட்டில் இருந்து அலுமினியம் உள்ளிட்ட தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.