சீனாவின் 19 இராணுவ போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுத திறன் கொண்ட விமானங்கள் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்து வெளியேறியதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வானை அச்சுறுத்தும் வகையில் சீனாவின் இராணுவ விமானங்கள் தாய்வானுக்குள் அடிக்கடி நுழைந்து வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தாய்வான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதும் சீனா அதனைக் கண்டுகொள்ளவில்லை.
தாய்வானை சீனாவின் ஆளுகைக்குள் உள்ள ஒரு பகுதியென சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்து தாங்கள் ஒரு இறையாண்மை கொண்ட சுயாதீன தனியரசு என தாய்வான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சீண்டல் நடவடிக்கையாக சீன விமானப் படையின் 19 போர் விமானங்கள் தமது வான் பரப்பில் பறந்ததாக தாய்வான் கூறியுள்ளது. அந்த விமானங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை என்றும் தைவான் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை குறித்து சீனா இதுவரை எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் இவ்வாறு 18 இராணுவ ஜெட் விமானங்களை தாய்வான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.