Tuesday 16th of April 2024 03:57:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை  தஞ்சமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை!

ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை தஞ்சமளிக்க வேண்டும் எனக் கோரிக்கை!


ஆப்கானிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கு இலங்கை அடைக்கலம் அளிக்க வேண்டும் என இலங்கை ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இது தொடர்பில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற வகையில், இந்த இக்கட்டான தருணத்தில் சக ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பரதூரமானதும் மற்றும் அபாயகரமானதுமான சூழ்நிலை தொடர்பில் அவதானத்தை செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலருக்கு தலிபான் ஆட்சியின் கீழ் பெரும் உயிர் ஆபத்து காணப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தற்போது உலகளாவிய பல நாடுகளில் மனிதநேயமிகு பொறுப்புமிக்க நடவடிக்கையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியான அவர்களின் அர்ப்பணிப்பை தெரிவிக்கும் முகமாகவும் ஆப்கானிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் சொந்த நாடுகளில் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்பை பல நாடுகள் இப்போது வழங்கியுள்ளன.

பல வருடங்களாகப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலங்கை நாடும் நுழைவுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த காலங்களில் தஞ்சம் அடைந்த உலகில் 80 மில்லியன் மக்களில், 170 ஆப்கானியர்கள் உட்பட 1300 பேர் இலங்கை அரசினதும் மற்றும் இலங்கை மக்களினதும் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர் என்பதை நாங்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூர்ந்து கொள்கிறோம்.

2005 இல் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்துடன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் (UNHCR) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 2006 இல் ஒப்புதல் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் (ToR) காரணமாக இலங்கை இந்த மைல்கல்லை எட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தலைமை வகித்த காலத்தில் இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டன. அதன்படி, இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அகதிகளைக் கையாள்வதற்கான நடைமுறை கட்டமைப்பையும் தொலைநோக்கு பார்வையாளரையும் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தில், காட்டுமிராண்டித்தனத்திற்குப் பலியாகி, அவர்களின் உயிரைக் கொடுக்க வேண்டிய பெண் ஊடகவியலாளர்கள் உட்பட பல ஊடகத்துறை வல்லுநர்கள் பாதுகாப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கின்றனர். அதன்படி, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்துடனான ஒப்பந்தத்தின் படி செயல்படும் இலங்கைக்குச் சிறந்ததொரு முன்மாதிரியான வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது வெளிநாட்டுச் சுற்றுலா குழுக்கள் மற்றும் விளையாட்டு அணிகளைப் பின்பற்றும் உடல்நலம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் இணைந்த தெற்காசிய ஊடக ஒத்துழைப்பு வலையமைப்பு (SAMSN) சார்க் நாடுகளின் தலையீட்டைக் கோரி ஒரு அறிகுறியையும் வெளியிட்டுள்ளது

இது தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பை நிரூபிக்கவும் மேலும் நமது நாடு மனித உரிமைகள் மற்றும் அகதிகளிற்கு உதவிக்கரம் அளித்தல் தொடர்பில் உறுதியாக உள்ளது என்பதையும் சர்வதேச சமூகத்திற்குக் காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது தொடர்பாக இலங்கை அரசு சாதகமாகப் பதிலளிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், இலங்கை அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுவதுடன், மேலும் இது தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் என்ற வகையில் தமது மனப்பூர்வமான முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கின்றோம் என்றுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE