நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் நிலையின் பின்னணியின் கபடமான எண்ணம் இருக்கிறது. இது குறித்த வர்த்தமானி பிரசுரத்திலே இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பேசும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைக்கு இந்த பாராளுமன்றத்திலே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதை ஆதரிக்குமாறு, அதற்கு இணங்குமாறு ஒரு கோரிக்கை இடப்படுகின்றது. உணவு விநியோகம், விலைவாசி அதிகரிப்பு என்பவை எங்களுக்கும் ஒரு பாரிய பிரச்சினை. ஆனால் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தித்தான் இதைக் கட்டுப்படுத்த முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டால் இல்லை என்ற பதில் தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஏதும் பதில் கிடையாது.
ஏனென்றால் உணவுப்பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கின்றமை, உணவுப் பொருட்களை விற்காமல் தடுப்பது அல்லது மறுப்பது இவற்றை எல்லாம் வேறு சாதாரண சட்டங்களின் கீழே செய்யப்படமுடியும். அதற்கான பிரிவுகளை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதற்கான சட்ட திட்டங்கள் நாட்டிலே ஏற்கனவே அமுலில் இருக்கின்றன.
அத்தியாவசிய சேவைகள் என்று சொல்லி ஏதாவது ஒரு சேவையை பிரகடனப்படுத்த வேண்டுமாக இருந்தால் அதற்கென்று ஒரு சட்டமே இருக்கின்றது. அதன் கீழே பிரகடனப்படுத்தலாம், நாளைக்கு அந்த பிரகடனம் ஒன்று பாராளுமன்றத்திற்கு வருகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே 17 வது பிரிவிலே, அதற்கான இடமிருக்கிறது. 17வது பிரிவு பாகம் 3 இலே இருக்கின்றது. பாகம் இரண்டை நடைமுறைக்கு கொண்டு வருகின்றபோதுதான் நாடு அவசரகால நிலைக்குள்ளே தள்ளப்படுகிறது.
அப்படி செய்யாமல் அதற்கு அடுத்த பாகத்திலே இருக்கின்ற இதற்கென்று விசேஷமாக கொடுக்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தை ஜனாதிபதி உபயோகித்திருக்கலாம்.
நாட்டை அவசரகால சூழலுக்குள்ளே கொண்டுவருவதற்கான உண்மையான நோக்கம், இப்படியாக ஒரு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விட்டால், அதன் கீழே அவசரகால சட்ட விதிகளை ஜனாதிபதியால் இரவோடு இரவாக கொண்டுவரமுடியும், அதை இந்தப் பாராளுமன்றம் கேள்விக்குற்படுத்த முடியாது, இந்த பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற கடமை மாதத்திற்கு மாதம் அவசரகால நிலையை நீடிப்பதை அனுமதிப்பதா? இல்லையா ? என்ற கேள்வி மட்டும் தான். இந்த வர்த்தமானி பிரசுரத்திலே இதைச் சொல்லியிருக்கிற விதத்திலே ஒரு கபடமான எண்ணம் இருக்கிறது தெளிவாக எங்களுக்கு தெரிகின்றது. நாட்டிலே விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது உண்மை ஆனால் இதை இப்படியாக செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், இதனை எதிர்க்கிறோம்.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை