கனடா பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஒன்ராறியோவில் எதிர்ப்பாளர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்திய நிலையில் இது குறித்து பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒன்ராறியோ - லண்டன் பகுதியில் பிரதமர் ட்ரூடோ பிரச்சாரத்துக்காக வாகனத்தில் பயணிக்கும்போது அவரது வாகனத்தை நோக்கி திங்கட்கிழமை கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் பிரதமருக்கோ அல்லது அவருடன் கூட இருந்தவர்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கனடாவில் எதிர்வரும் 20 - ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையி்ல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஒன்ராறியோ - லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலாளிகள் குறித்து தகவல் அளிக்குமாறு லண்டன் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்ப்பாளர்களால் வீசப்பட்ட கற்கள் பிரதமர் ட்ரூடோ மீது விழுந்தது. அத்துடன், அவரது பாதுகாப்பு படையினர், ஆர்.சி.எம்.பி. பொலிஸார் மற்றும் பிரச்சாரக் குழுவினரும் கற்களால் தாக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் சிலரும் இதில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை நான் கண்டுகொள்ளவில்ல. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பதை பொலிஸாரே தீா்மானிப்பார்கள் என ட்ரூடோ கூறினார்.
எனினும் எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்தையும் தடுக்க முயல்வதும், பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்க முயலும் வன்முறைச் செயற்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மொன்றியலில் நேற்று இடம்பெற்ற தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது பிரச்சாரக் குழு மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
கனடாவின் எதிர்காலத்தைத் தீா்மானிக்கும் தோ்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான விவாதத்தல் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் வன்முறை மூலம் பிரச்சாரத்தை தடுக்க முயல்வதையோ, துன்புறுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான உரிமை யாருக்கும் இல்லை என பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் நேற்று ஒட்டாவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் மோசமான நடத்தை. எல்லை மீறிய வன்முறை என நேற்று ரொரண்டோவில் செய்தியாளர்களிடம் பேசிய என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் கண்டனம் தெரிவித்தார்.
எந்தவொரு வேட்பாளரின் பிரச்சாரத்தை தடுக்கவோ, மிரட்டவோ, வன்முறையில் ஈடுபடவோ யாருக்கும் உரிமை கிடையாது. இது ஒரு மோசமாக செயற்பாடு என கியூபெகோயிஸ் தலைவர் யவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கூறினார்.
இத்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பசுமை கட்சியின் தலைவர் அன்னமி பவுல், தனது கட்சிக்கெதிராக சமூக ஊடகங்கள் ஊடாக இனவெறி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் தாங்கள் அச்சுறுத்தல்களுக்கு இலக்கானதாகவும் குறிப்பிட்டார்.
"சில முட்டாள்கள் ட்ரூடோவின் பிரச்சாரக் குழு மீது மீது கூழாங்கற்களை வீசினார்கள், நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கனடா மக்கள் கட்சி தலைவர் மக்ஸிம் பெர்னியர் தெரிவித்துள்ளார்.
“வார்த்தைகள்தான் எங்கள் ஆயுதம். உடல் ரீதியாக மற்றவர்களைத் துன்புறுத்தும் வன்முறை எப்போதும் தவறானது” எனவும் அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.