வியட்நாமில் தெரிந்துகொண்டே மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றைப் பரப்பியதுடன், ஒருவரின் மரணத்துக்கும் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லீ வான் த்ரி எனும் இந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களின் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
28 வயதாகும் லீ வான் த்ரி ஹோசி மின் நகரத்திலிருந்து தமது சொந்த மாநிலமான கா மாவிற்கு ஜூலை மாத தொடக்கத்தில் வந்துள்ளார். அவர் இரு சக்கர வாகனம் மூலம் பயணித்து வந்ததுடன், தொற்று குறித்த தகவல்களை மறைத்துள்ளதுடன் தனிமைப்படுத்தல் விதிகளையும் பின்பற்றாமல் இருந்தார் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்தே வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் குற்றவாளி எனத் தீா்ப்பளித்து 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அத்துடன், 880 டொலர்கள் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
வியட்நாமில் இதுவரை 5 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,300 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக அங்கு டெல்டா பரவல் தீவிரமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்