வடக்கு மாசிடோனியாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 10 பேர் பலியாகினர்.
டெட்டோவோ நகரத்தின் ஒரு முக்கிய வீதிக்கு அருகில் உள்ள வைத்தியசாலைக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது.
புதன்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு (19:00 GMT) தீப்பரவல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்குள் தீயை அணைத்தனர்.
இந்தத் தீவிபத்தில் பலர் மோசமாகக் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என வடக்கு மாசிடோனியா சுகாதார அமைச்சர் வெங்கோ பிலிப்ஸ் எச்சரித்துள்ளார். "இது மிகவும் சோகமான நாள்," என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தலைநகர் ஸ்கோப்ஜேயில் உள்ள மருத்துவமனைக்கு அவசர-அவசரமாக மாற்றப்பட்டனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒக்ஸிஜன் சிலண்டர் வெடித்து இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்டவேளை டெட்டோவோவில் உள்ள மருத்துவமனையில் எத்தனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பதற்காக கடந்த ஆண்டு இந்த வைத்தியசாலை தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடக்கு மாசிடோனியாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் உள்ளனர்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, அங்கு இதுவரை 180,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,153 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்