பெண்களுக்கு சம உரிமை வேண்டும். ஆட்சியில் இடமளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் நேற்று புதன்கிழமை பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலிபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அமைச்சரவையில் பெண்கள் ஒருவருக்குக் கூட இடமளிக்கப்படாதது குறித்தும் பெண்கள் விவகார அமைச்சு ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவா்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது தாங்கள் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், கீழ்த்தரமான வார்த்தைகள் மூலம் இம்சிக்கப்பட்டதாகவும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தாலிபன்கள் கூறியுள்ளனர், பெண்கள் படிப்பதற்கோ வேலைக்குச் செல்வதற்கோ தாங்கள் எதிராக இருக்க மாட்டோம் என்றும் அண்மையில் அவர்கள் அறிவித்தனர்.
எனினும் ஆனால் ஆகஸ்ட் 15 அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பொது சுகாதாரத் துறையில் உள்ளவர்களைத் தவிர, மற்ற அனைத்து பெண்களும், பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை வேலைக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் ஹெராட்டில் நடந்த போராட்டத்தின் போது 03 பெண்கள் கொல்லப்பட்டனர். கூட்டத்தை கலைக்க தாலிபன்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தாலிபன்கள் போராட்டக்காரர்களை சாட்டையால் அடிக்கும் பல வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடு சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அனைத்து உரிமைகளையும் வன்முறையின்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் ஐ.நா. அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு நீதித்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வெண்டும், போராட்டம் இடம்பெறவுள்ள இடம், நேரம், ஆகியவற்றை பாதுகாப்புத் துறையிடம் அளிக்க வேண்டும். என்னென்ன பதாகைகள், முழக்கங்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும் என தாலிபன்கள் கூறியுள்ளனர்.