உலகின் இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்களான சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் 07 மாதங்களுக்குப் பின்னர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.
ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரு தலைவர்களுக்கு இடையே நடந்த இரண்டாவது உரையாடல் இதுவாகும்.
வர்த்தகம், உளவு மற்றும் தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் அமெரிக்க-சீன இடையில் தொடரும் பனிப்போரின் மத்தியில் இந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், கொரோனா தொற்றைக் கையாளுதல், பாதுகாப்பு மீறல்கள், வர்த்தகப் போர் குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளும், தங்களுக்கு இடையேயான போட்டியை வரவேற்கிறோம். ஆனால், இந்தப் போட்டி மோதலாக மாற விரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஜி ஜின்பிங்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவால் தவறாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.ஜோ பைடன் தொடக்கத்திலிருந்தே சீனா மீது அதிக கவனம் செலுத்திவருகிறார். அவர் பசிபிக் நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த விரும்புகிறார். அமெரிக்கா, சீனா நாடுகளின் உலகளாவிய வர்த்தகத்தையும், முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகிறார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். இதனால் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.