கனடாவில் செப்டம்பர் -20 பொதுத் தோ்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் முற்கூட்டிய தோ்தல் அறிவிப்பு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பாதகமாக அமையலாம் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 தொற்று நோயைத் தீவிரமாக எதிர்கொள்ளும் நோக்குடனேயே பொதுத் தோ்தலை அறிவித்தாக பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தி வருகிறார். தற்போது சிறுபான்மையைக் கொண்டுள்ள லிபரல் அரசாங்கம் தொற்று நோய் நெருக்கடியுடன் தீவிரமாகப் போராடுவதற்கு ஏதுவாக கனேடியர்கள் பெரும்பான்மை ஆதரவை வழங்குவார்கள் என ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் அறிவிக்கப்படடுள்ள பொதுத் தோ்தல் தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
அத்துடன், முற்கூட்டிய தோ்தல் அறிவிப்புக் குறித்து வாக்காளர்கள் மகிழ்ச்சியடையவில்லை என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் லிபரல் கட்சித் தலைவரை விட எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் சிறிய முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முற்கூட்டிய தோ்தல் அறிவிப்பு குறித்து வருத்தப்படுகிறீர்களா? என ஒன்ராறியோ - ஹாமில்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் நிச்சயமாக இல்லை. நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்றார்.
இதேவேளை, மத்திய அரசுப் பணியாளர்களுக்காக கட்டாய தடுப்பூசிக் கொள்கை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் வியாழக்கிழமை 1,200 வாக்காளர்களிலிடம் நானோஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் கன்சர்வேடிவ்கள் 33.3% ஆதரவையும், ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினர் 31.3% ஆதரவையும் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியினர் 19.2% வீத ஆதரவைக் கொண்டுள்ளதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.