அணு சக்தி திட்டங்களை மேற்பார்வை செய்ய ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கு மீண்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரான் அணு சக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி மற்றும் ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தலைவர் ரஃபேல் க்ரோசி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஈரானின் அணு சக்தி தளங்களில் ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஈரான் அனுமதிக்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் தெஹ்ரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான மோதல்போக்கு தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒப்பந்தம் மூலம் ஏற்கனவே ஈரான் அணுசக்தி தளங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராங்களில் புதிய சேமிப்பு நினைவகங்களை பொருத்த ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா., பாதுகாப்பு பேரவை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய, ஈரான் சம்மதித்தது. அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தார். அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜனாாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
'ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு பொருத்தியுள்ள கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்படும்' என, ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களுக்கான பிரிவு அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே நிலைமைகளை சுமூகமாக்கும் நோக்குடன் தனது அணு சக்தி திட்டங்களை மேற்பார்வை செய்ய ஐ.நாவின் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கு மீண்டும் ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.