தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதிக்க சர்வதேச உதவி வழங்கும் நாடுகள் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் கூடுகின்றன.
இதற்கிடையில் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை வழங்கியுள்ளதுடன், எதிர்கால உதவி பற்றிய கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலை நெருக்கடியில் உள்ளது. அங்கு மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மனித உரிமைகளை பேணுவது, குறிப்பாக பெண்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவது தொடர்பான உத்தரவாதத்தை தலிபான்கள் அளிக்கும் வரை ஆப்கானிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் தயங்குகின்றன.
நாட்டின் சுமார் 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு சொத்துகளும், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளன.
ஆனால் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியன தலிபான்கள் தலைமையிலான அரசுடன் ஏற்கனவே நல்லுறவுகளை பேணுவதற்கான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளன. இவ்விரு நாடுகளுக்கு உதவிப் பொருட்களுடன் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன.
கடந்த மாதம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பின்னர் ஆப்கானுக்கு முதல் வெளிநாட்டு உதவிக்கான உறுதி மொழியை சீனா வழங்கியது. 31 மில்லியன் டொலர் மதிப்புள்ள உணவு மற்றும் மருத்துப் பொருட்களை ஆப்கானுக்கு அனுப்பவுள்ளதாக சீனா கடந்த வாரம் அறிவித்தது.
பாகிஸ்தான் கடந்த வாரம் காபூலில் உள்ள அதிகாரிகளுக்கு சமையல் எண்ணெய் மற்றும் மருந்து போன்ற பொருட்களை அனுப்பியது. ஆப்கானுக்கு நிபந்தனை இன்றி உதவிகளை வழங்குமாறு சா்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, லித்தியம் உட்பட ஆப்கானிஸ்தானில் உள்ள கனிம வளங்களைக் கவரும் நோக்கிலேயே சீனா ஆப்கானிஸ்தானை நெருங்கி வருவதாக சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய வாரங்களில் தலிபான் தலைவர்களும் சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புவதாக கூறியுள்ளனர். நாட்டுக்கு நன்மை பயக்கும் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சீனாவுடன் டோகாவில் வைத்து தலிபான் தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.