வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் முக்கிய அணுசக்தி தூதர்கள் இன்று செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய நீண்ட தூர ஏவுகணை சோதனையை நடத்தியதாக வட கொரியா அறிவித்து ஒரு நாள் கழித்து இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் 1,500 கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடியவை என வட கொரிய அரச ஊடகம் நேற்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான நெருங்கிய தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக தென் கொரியாவுக்கான அமெரிக்க விசேட தூதர் சுங் கிம் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இராஜதந்திர ரீதியாக இணைந்து செயலாற்ற அமெரிக்கா எப்போதுமே தயாராக இருப்பதாகவும் ஜப்பான் மற்றும் தென்கொரிய பிரதிநிதிகளுடன் பேசிய விசேட தூதர் சுங் கிம் கூறினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோர் 2018 இல் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அணு ஆயுத தவிர்ப்பு முக்கிய குறிக்கோளாக இருந்தது. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, வட கொரியா மீதான தடைகளை அமெரிக்கா மற்றும் பல மேற்குலக நாடுகள் இறுக்கமாக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் தொடரும் தடைகள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியா இடையிலான சமீபத்திய கூட்டு இராணுவப் பயிற்சி ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளையும் காண முடியவில்லை என வட கொரியா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.