நாட்டில் இன்று பொருளாதார அமைச்சர் யார் என்று தேடிப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இன்று தரவு மோசடி குறித்து விவாதிக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து திலிப் பீரிஸும் கருத்துரைத்துள்ளார். நிறுவனங்களில் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர். ஒரே மருந்து வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வந்தன எனவும், அதன்மூலம் மோசடிகள் நடைபெறுகின்றன எனவும் அவர் கூறினார்.
2017ஆம் ஆண்டு ஒளடத மாப்பியாக்களுக்கு வேலைகளைப் பிரித்துக்கொடுத்தனர். தற்போது ஒளடத மாப்பியாக்கள் தலைத்தூக்கியுள்ளன. இதன் பின்னணியிலுள்ளவர்களை நாம் கண்டறிய வேண்டும்.
சர்வதேசத்தைக் காரணம் காட்டி நெஞ்சில் அடித்துக்கொண்டே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது கொழும்புத் துறைமுகத்தில் உள்ள ஒரு நிலம் சீனாவுக்கு இரண்டு துண்டுகளாகப் பிரித்துக்கொடுக்கப்படவுள்ளன.
13 ஏக்கர் நிலப்பரப்பு எவ்வித ஆரம்பக்கட்டணம் இன்றி வழங்கப்படவுள்ளது.
தற்போது இந்த அரசை ஜிம்பிம்மே நடத்தி வருகின்றார். யுவானுக்கு அடிபணிந்து தற்போதைய அரசு ஜிம்பிம்முக்கு தேவையான வகையிலேயே செயற்பட்டு வருகின்றது. இந்த அநியாயச் செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட வேண்டியது அவசியம்.
தற்போது ஒவ்வொரு மின்னுற்பத்தி நிலையங்களையும் வேறு வேறு நாடுகளுக்கு வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கும்போது அந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் செய்றபட முடியும். தற்போது எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடன் வாங்கவுள்ளார். அந்த கடனைப் பெற்றுக்கொடுக்கவிருப்பவர்கள் 7 சதவீதம் கமிசனைப் பெறவுள்ளனர்.
இந்த அரசு வட்டி முதலாளி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜிட் நிவாட் கப்ரால் வரவுள்ளார். நிதி அமைச்சராகப் பஸில் ராஜபக்ச வந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது அஜிட் நிவாட் கப்ரால் வரும் வரை காத்திருக்கின்றனர்.
நாட்டில் இன்று பொருளாதார அமைச்சர் யார் என்று தேடிப்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வெவ்வேறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்" - என்றார்.