நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டதுடன் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனக் கூறிய போதிலும் அவ்வாறான எதனையும் காண முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குக் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கினால் அவர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக சகல சவால்களையும் வெற்றி கொண்டு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
எதிர்வரும் தேர்தலில் அமோக வெற்றியீட்டும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தேர்தலுக்குச் செல்ல முன்னர் நாட்டின் நிலைமை முற்று முழுதாக மாற்றம் பெற்றிருக்கும்" - என்றார்.