அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றுவதை தடுத்து ஆணையீட்டு எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் நேற்று குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் துணை ஆளுநர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அஜித் நிவாட் கப்ரால் ஏற்கனவே மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கிக்கு 10.4 பில்லியன் ரூபா தொடக்கம் 10.6 பில்லியன் ரூபா வரை நட்டம் ஏற்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறிகள் மோசடி தொடர்பிலான கணக்காய்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதால், அவரை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கீர்த்தி தென்னக்கோன் கோரிக்கைவிடுத்துள்ளார்.