பாடசாலை மாணவர்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பித்தல் மற்றும் பாடசாலைகளைத் திறக்கும்போது எந்த வகுப்புக்களை முதலில் ஆரம்பிக்கலாம்? என்பது குறித்து இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அத்துடன், எந்தப் பிரிவு மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசிகளை வழங்குவது? எனவும் இன்றைய கூட்டத்தில் தீா்மானிக்கப்படும்.
இங்கிலாந்தில் உள்ள ஜோன் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரிசோதனையில் கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெறும் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு சில வகையான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற கருத்து உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
தடுப்பூசி போட்ட பின்னரும் பாடசாலைகளை திறப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. எனினும் அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து சிறந்த முடிவை எடுப்போம் எனவும் அவா் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பித்தல் மற்றும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.