வட கொரியா தனது கிழக்கு கடற்கரை பிராந்தியத்திலிருந்து இன்று புதன்கிழமை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் (JCS) உறுதி செய்துள்ளனர்.
வட கொரியாவின் கிழக்கு கடலோரப் பிராந்தியத்தில் இருந்து ஏவுதல் நடந்தது. அது ஏவுகணையாக இருக்கலாம் என ஜப்பானும் தெரிவித்துள்ளது.
இது மூா்க்கத்தனமான நடவடிக்கை. பிராந்தியத்தில் அமைதியைச் சீர்குலைத்து அச்சுறுத்தல் விடும் நோக்கம் கொண்டது என ஜப்பானின் பிரதமர் யோஷிஹிட் சுகா இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஏவுகணைகள் எங்கு வீழ்ந்தன? அவற்றின் வீச்சு எல்லை என்ன? என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. இந்நிலையில் வட கொரியாவில் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக இணைந்து ஒத்துழைத்துச் செயற்பட்டு வருவதாக தென்கொரிய கூட்டுத் தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1,500 கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய திறன் கொண்ட புதிய ஏவுகணைகளை வட கொரியா கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏவி பரிசோதித்தது. இதனைவிட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. உறுதி செய்தது.
எனினும், இந்த ஏவுகணை பரிசோதனை மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறவில்லை என வட கொரிய குறிப்பிட்டுள்ளது.
ஆனால் வட கொரிய பரிசோதித்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று நீண்ட தூர இலக்குகளை விரைவாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என்பதால் இதனால் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவின் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் முக்கிய அணுசக்தி தூதர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.