கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூா் இன்று புதன்கிழமை முதல் தளர்த்தியுள்ளது.
கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதை அடுத்து சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக குடியிருப்புக்களுக்குள் முடங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இன்று சுதந்திரமாக வெளியேறி சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
சிங்கப்பூரின் ஏனைய பகுதிகள் ஒருளவு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர் தொழிலாளர்கள் அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து, அவர்களது குடியிருப்புகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் 6 மணி நேரங்கள் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகளில் இன்று தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதம் கழித்து இந்தத் திட்டம் குறித்து மீளாய்வு செய்யப்படும் என சிங்கப்பூா் அரசு அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நிதி மையமான சிங்கப்பூா் , பல்லாயிரக்கணக்கான தெற்காசிய தொழிலாளர்கள் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதேவேளை, உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி நிர்வகிப்பு வீதத்தை சிங்கப்பூா் கொண்டுள்ளது. அங்கு 81% வீதம் பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: சிங்கப்பூர்