அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேசுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று சிறைச்சாலைக்குச் செல்கிறார்.
சிறைச்சாலை அச்சுறுத்தல் விவகாரம் குறித்து அவசர சந்திப்புக்கு கோரிக்கை விடுத்து கைதிகள் கடிதம் ஒன்றை அனுப்பியதை அடுத்தே அமைச்சர் அங்கு செல்வதாக தெரியவருகிறது.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மது போதையில் சென்ற சிறைச்சாலை ராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த கைதிகளை முழந்தாளிடச் செய்து, தலையில் துப்பாக்கி வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடும் கண்டனங்களை எழுந்ததை அடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் பொறுப்பிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.
எனினும் இரத்திரன கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக அவர் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.