சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் ஒன்றிணைகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த கூட்டு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் . இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ள நிலையிலேயே அதனைச் சமாளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.
ஆக்கசின் கீழ் முதல் முயற்சியாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த மூன்று நாடுகளும் இயல்பாகவே கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக அமைந்துள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் ,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.