கனேடிய நாடாளுமன்ற பொதுத் தோ்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் இறுதிக்கட்ட கருத்துக் கணிப்புக்கள் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையை வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் கனடாவில் மீண்டும் ஒரு சிறுபான்மை அரசாங்கமே அமையலாம் எனக் கருதப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நனோஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம் லிபரல் கட்சி 31.9% ஆதரவைப் பெற்று மிகச் சிறிய முன்னிலை வகிக்கிறது.
அதேவேளை, கனசர்வேடிவ் கட்சி 30.3% ஆதரவைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், என்.டி.பி. 22.4% ஆதரவைப் பெற்றுள்ளது.
1,200 கனேடியர்களிடம் தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் சிறுபான்மை ஆட்சி அமைத்திருந்த பிரதமர் ட்ரூடோ, தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க பெரும்பான்மை ஆதரவு தேவை எனக் கோரி பாராளுமன்றத்தை கலைத்து தோ்தலை அறிவித்தார்.
எனினும் தோ்தலுக்கு முன்னரான கருத்துக் கணிப்புக்களின் பிராகாரம் எந்தவொரு கட்சியும் மீண்டும் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
லிபரல் மற்றும் கன்சா்வேடிவ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டவாக்கங்களின் போது எதிர்க் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை உருவாகலாம் எனக் கணிக்கப்படுகிறது.