நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டு அங்கு பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்து மதுபானங்களைப் பெற்றுச் சென்றிருந்தபோதிலும் வவுனியா சுகாதாரத் தரப்பினர் மட்டும் துணிந்து நடவடிக்கை எடுத்தமை பாராட்டுப்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் சில வகை மதுபானப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக ஊடகங்கள் ஊடாக மதுவரித் திணைக்களத்தினரால் தகவல்கள் கசியவிடப்பட்டபோதிலும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியிருக்கவில்லை.
இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் மதுப்பிரியர்கள் மதுபான சாலைகளுக்கு முன்பாக முண்டியடித்து தமது தாகம் தீர்க்க மதுபானங்களைப் பெற்றுச் சென்றிருந்தனர்.
அதன் போது சமூக இடைவெளியோ, சுகாதார நடைமுறையோ எந்த வகையிலும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டினால் இலங்கையில் மீண்டும் மிகப் பெரிய கொரோனாக் கொத்தணி உருவாகும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் தாம் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தபோதிலும் தம்மிடம் அனுமதி பெறப்படவில்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருந்தபோதிலும் மதுச்சாலைகளை மூடவோ அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ வவுனியா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
யாழ்ப்பாணம் உட்பட்ட ஏனைய பகுதிகளில் பொலிஸார் மதுப் பிரியர்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டினையே முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் வவுனியாவில் சுகாதாரத் தரப்பினர் பொலிஸாரின் துணையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஊரடங்கு நடைமுறைகளை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மதுபான சாலைகள் 04 கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியாநகரில் கண்டி வீதியில் உள்ள மதுபானசாலை, பூவரசன்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை, ஓமந்தையில் உள்ள மதுபானசாலை, மரக்காரம்பளையில் உள்ள மதுபானசாலை என 4 மதுபானசாலைகள் தனிமைப்படுத்தல் அறிவித்தல் ஒட்டப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் முண்டியடித்து மது வாங்கச் சென்ற நபர்களின் குடும்பத்தாருக்கும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் மறந்துள்ளார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா