தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் நேற்று சனிக்கிழமை சிறுப்பிட்டியில் இடம்பெற்றது.
சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் வட பிராந்திய இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திரு. ம. பிரதீபன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. த. ரவீனதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கொரோனாப் பெரும் தொற்றுக்காரணமாக மருத்துவமனைகளுக்குச் சென்று குருதி வழங்குபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான குருதிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி விடுத்த அவசர வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கோப்பாய்த் தொகுதிக் கிளையால் சிறுப்பிட்டியில் குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. தா. யுகேஸ் கலந்துகொண்டு பங்கேற்ற அனைவருக்கும் செவ்விரத்தம் பூச்செடிகளை வழங்கி வைத்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்