Tuesday 19th of March 2024 04:43:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு; செப்-27 வரை ஒத்திவைப்பு!

தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு; செப்-27 வரை ஒத்திவைப்பு!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தனது தந்தை மற்றும் தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழக்கானது வரும் செப்-27 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை மையமாக கொண்டு அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய், கடந்த் ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), பொருளாளர் ஷோபா சேகர் (தாய்) உள்பட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்டு 23-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜர் ஆகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE