முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நாயாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
செம்மலை கிழக்கு, நாயாறு பகுதியைச் சேர்ந்த ஏ.கதீஸ்கரன் (வயது 23) என்ற இளைஞரே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
செம்மலையிலிருந்து நாயாறு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த வடலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரின் கழுத்துப் பகுதியில் கருக்கு வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
அவர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு