வட கொரியா அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் இருந்து மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடற்பரப்பில் இந்த ஏவுகணை வீழ்ந்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் 1,500 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய இரண்டு நீண்ட தூர ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்த நிலையில் நேற்று மற்றொரு சோதனை இடம்பெற்றுள்ளது.
தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்த ஏவுகணை சோதனை பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்டையாக அமையலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நேற்று ஏவப்பட்டது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் எனவும், இது ஐ.நாவால் தடை செய்யப்பட்டது எனவும் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருவதாக தென்கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனது.
எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து வெளியிட்ட இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க இராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.