வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்தை பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனைகள் தொடங்கப்பட்டு இடம்பெற்று வருவதாக பைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாய்வழி தடுப்பு மருந்து முதல் கட்ட பரிசோதனையில் அது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிசெய்யப்பட்டது. அடுத்த கட்டமாக ஆரோக்கியமான 18 வயதுக்கு மேற்பட்ட 2,660 பங்கேற்பாளர்களிடம் இந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.
கொவிட் தொற்று நோயின் பாதிப்புக்களைத் தடுப்பதில் மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படும் என பைஸர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம். ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம் என பைஸரின் தலைமை அறிவியல் அதிகாரி மிக்கேல் டால்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து வெற்றிகரமாக இருந்தால் இது வைரஸை வேகமாக ஒழிக்கும் முயற்சிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் மிக்கேல் டால்ஸ்டன் கூறினார்.
ஜேர்மன் பங்குதாரரான பயோஎன்டெக் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பைசரின் தடுப்பூசி, இதுவரை அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முழு ஒப்புதலைப் பெற்ற ஒரே தடுப்பூசியாக உள்ளது.
கடந்தடிசம்பர் மாதத்தில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 223 மில்லியனுக்கும் அதிகமான பைஸர் தடுப்பூசிகள் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டதாக அந்நாட்டு தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.