திருகோணமலை மாவட்டம் வரோதயநகரில் முன்னாள் போராளி ஒருவர் பொலிஸார் எனத் தெரிவிக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய குழு ஒன்றினால் இன்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் திருகோணமலை வரோதயனகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்திய நபர்கள் அவரை விசாரணைக்கு எனத் தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நம்பி அவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்திருக்கின்றனர்.
அவ்வாறான நடவடிக்கை எவையும் தம்மால் முன்னெடுக்கப்படவில்லை என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை அடுத்து குடும்பத்தாரால் மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் முறையிடப்பட்டுள்ளது. முறையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவரது மனைவி மற்றும் தாயார்,
குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி பல வருடங்களாக சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வந்ததாகவும் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தமக்கு தெரியாத நிலையில் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி கோருவதாகவும் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை