கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நீக்குவது தொடர்பில் இறுதித்தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் முடக்கத்தை நீக்கி நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் எதிர்வரும் சில தினங்களுக்கு இது குறித்த இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், திட்டமிட்டபடி ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமாயின் அதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக கொவிட் -19 செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை