தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாக்வாலி நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற பயங்கர மோதலில் 24 பேர் பலியாகினர். மேலும் 48 கைதிகள் காயமடைந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு குழுக்களாகப் பிரிந்துள்ள கைதிகளுக்கு இடையே அவ்வப்போது கோஷ்டி மோதல்களும் இடம்பெறுவது வழமை. இவ்வாறு நேற்று கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது. துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 24 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து சிறைச்சாலையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, இரு தரப்பினர் இடையேயான மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் ஈக்வடாரின் நான்கு சிறைச்சாலைகளில் நடந்த தொடர் கலவரங்களில் 79 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.