ஸ்பெயின் - கேனரி தீவான லா பால்மாவில் உள்ள கும்ப்ரே வீஜா எரிமலை குழம்புக்கள் ஆறுபோன்று ஓடி நேற்று மாலை அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.
இவ்வாறு எரிமலைக் குழம்பு கடலில் கலப்பதால் ஆபத்தான வாயுக்கள் வெளியாகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த 19 ஆம் திகதி ரிக்டர் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்தது.
இந்த எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை வானத்தில் பரவியது. இதன் பின்னர் அந்த எரிமலையில் இருந்து தொடர்ச்சியாக நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது.
எரிமலை வெடிப்பிற்கு முன்னரே முன்னெச்சரிக்கையாக அதனைச் சூழவிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் 500-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறப்பட்டனர்.
இந்த நிலையில் கும்ப்ரே வீஜா எரிமலை குழப்புக்கள் ஆறுபோன்று ஓடி நேற்று மாலை அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது. அப்போது எழும்பிய புகை மூட்டம் வானில் நீண்ட தூரம் வரை பரவியது. இதனால் ஆபத்தான வாயுக்கள் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.