தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாக்வாலி நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற பயங்கர மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 80 க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்தனர்.
நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான சிறை வன்முறை இதுவாகும்.
குயாக்வாலி நகரில் உள்ள சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகள் தலைகள் துண்டிக்கப்பட்டன. மற்றவர்கள் சுட்டும் வெட்டியும் கைக்குண்டுத் தாக்குதலிலும் கொல்லப்பட்டனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்கடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட பெருமளவு கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிந்த இந்தச் சிறைக் கலவரத்தைக் கட்டுப்படுத்த சுமார் 400 பொலிஸார் களமிறக்கப்பட்டனர்.
ஈக்வடாரில் செயற்படும் சக்திவாய்ந்த மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் இந்தக் கலவரம் தூண்டப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் பயங்கரமானது என ஈக்வடாரின் சிறைச்சாலைகள் பணிப்பாளர் பொலிவார் கார்சன் விபரித்துள்ளார்.
சிறைச்சாலைக் கலவரத்தை ஒடுக்கி நிலைமையை நேற்று பொலிஸார் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மோதல் இடம்பெற்ற பகுதிகள் மற்றும் சிறைக்கூண்டுகளுக்குள் தேடுதல் நடத்தி அங்கிருந்து கொல்லப்பட்ட பலரின் உடல்களை கண்டுபிடித்தோம் எனவும் அவா் கூறினார்.
சிறைச்சாலையின் ஒரு பிரிவைச் சேர்ந்த கைதிகள் சிறிய சுரங்கப் பாதைகளை அமைத்து வேறு பிரிவுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த கைதிகளைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்தே கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்ததாகவும் பொலிவார் கார்சன் கூறினார்.
இந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ சிறைத்துறை அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
ஈக்வாடரில் சிறைகளில் மொத்த திறன் வரம்பை விட தற்போது 30% அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ தெரிவித்தார்.
இந்நிலையில் சிறிய குற்றங்களுக்காக அதிக காலம் சிறைகளில் உள்ளவர்களை விடுவிப்பதற்கான திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஈக்வடாரின் நான்கு சிறைச்சாலைகளில் நடந்த தொடர் கலவரங்களில் 79 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தமையும் குறிப்பிடத்தக்கது.