நடப்பு ஐ.பி.எல். ரீ-20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் சென்னை அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் வெற்றி பெற்று பிளே-ஒஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் நேற்றயை ஆட்டத்தில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக விருத்திமான் சகா 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 135 என்ற வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 139 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்து அடுத்து வந்த வீரர்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்தது.
ருதுராஜ் 38 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ஓட்டத்தில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார். அப்போது சென்னை அணிக்கு 25 பந்தில் 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 ஓவரில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரின் 4-வது பந்தில் டோனி கொடுத்த கடினமான கேட்சை ஜேசன் ராய் பிடிக்க தவறினார். இதனால் டோனி 2 ஓட்டத்தில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். அடுத்த பந்தை அம்பதி ராயுடு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 6 ஓட்டங்கள் கிடைத்தது.
19-வது ஓவரை புவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அம்பதி ராயுடு ஆறு ஓட்டத்தை விளாசினார். 4-வது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் டோனி. இதையடுத்து கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். 4-வது பந்தை டோனி சிக்சருக்கு தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியை தழுவிய நிலையில் 9 வெற்றிகளுடன் அதிகாரப்பூர்வமாக பிளே-ஒஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை