விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக விமான எதிர்ப்பு ஏவுகணையை நேற்று வியாழக்கிழமை ஏவி பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை(hypersonic missil) வட கொரிய பரிசோதித்த 3 நாட்களில் இந்தப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
நேற்று பரிசோதிக்கப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணையுடன் கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.
இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரச ஊடகமான கே.சி.என்.ஏ. குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான ஏவுகணை பரிசோதனைகள் நிலையற்றதன்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக அமெரிக்காவின் உள்துறை செயலர் அந்தோனி ப்ளிங்கன் கூறினார். ஆனால் வடகொரியா தனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஆயுத பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவும், தென் கொரியாவும் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.