தென்கொரியா உடனான தகவல் தொடர்பு மையத்தை குண்டுவைத்து வட கொரியா தகர்த்த சில மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பாடல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற வகையில் தென் கொரியாவுடன் தகவல் தொடர்புகளைப் பேண தயாராக இருப்பதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்த சில நாட்களின் பின்னர் இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
எனினும் உறவுகளைத் தொடர்ந்து நல்ல முறையில் பேணுவது தென் கொரிய அதிகாரிகளின் அணுகுமுறையை பொறுத்தது என வட கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா சமீப காலமாக தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
ஒரு மாதத்திற்குள் நான்கு ஏவுகணைகளை வீசி வட கொரிய சோதனைகளை நடத்தியது. இது அதன் ஆயுத பலத்தை அதிகரிக்கும் எண்ணத்தில் மாற்றமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் இரு கொரிய நாடுகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பாடல் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக இரு நாட்டு அதிகாரிகளும் தொலைபேசி ஊடாகப் பேசிக்கொண்டனர்.
இரு தரப்புக்கும் இடையேயான தகவல் தொடர்பாடல் பல முறை நிறுத்தப்பட்டு பின்னர் வழமைக்குத் திரும்பின.
2020 ஆம் ஆண்டில், இரு கொரிய நாடுகளுக்கும் இடைய நடந்த பேச்சுக்கள் தோல்வியுற்ற பின்னர் எல்லையில் அமைந்திருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு மையத்தை வட கொரியா குண்டு வைத்துத் தகர்த்தது.
அத்துடன், தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் வட கொரியா துண்டித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்த நிலையில் இப்போது மீண்டும் இரு நாடுகளும் தகவல் தொடர்புகளை ஆரம்பித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை தணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.