வரி ஏய்ப்புச் செய்து வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பல மில்லியன் டொலர் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பல உலகத் தலைவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர்.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) மற்றும் 150 செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு உட்பட அமைப்புக்களால் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியிடப்பட்ட பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் இரகசிய ஆவணத்தில் உலகளவில் 330க்கும் மேற்பட்ட உயர் மட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொது அதிகாரிகள் வெளிநாட்டுக் கணக்குகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள 12 மில்லியன் கோப்புகள் வரலாற்றில் மிகப்பெரிய இரகசிய ஆவணக் கசிவு ஆகும்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம்அப்துல்லா பின் அல்-ஹுசைன் இங்கிலாந்தில் 70 மில்லியன் யூரோ சொத்து உட்பட பல இடங்களில் சொத்துக்களை இரகசியமாகக் குவித்ததை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மொனோக்கோவில் இரகசிய சொத்துகளைக் கொண்டிருப்பதையும் இந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மன்னர் வெளிநாட்டில் சொத்து வைத்திருப்பது அசாதாரணமானது அல்லது முறையற்றது அல்ல என ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹுசைன் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் உட்பட, மோல்டா மற்றும் பிரான்சின் முன்னாள் நிதி அமைச்சர்கள், பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் பிரேசிலின் நிதி அமைச்சர்கள் ஆகியோருக்கு வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக கசிந்துள்ள இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முன்னாள் முக்கிய அரச தலைவராகக் கருதப்படுகிறார்.