Thursday 18th of April 2024 08:45:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
எந்த எல்லைக்கும் செல்வோம்  சீனாவுக்கு தாய்வான் எச்சரிக்கை!

எந்த எல்லைக்கும் செல்வோம் சீனாவுக்கு தாய்வான் எச்சரிக்கை!


தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் அதனால் ஆசியப் பிராந்தியத்தின் அமைதிக்கு பேரழிவு ஏற்படும் என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் எச்சரித்துள்ளார்.

தாய்வான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். எந்த எல்லைக்கும் செல்லும் என வெளிவிவகார அமைச்சின் ஊடகத்தில் ஜனாதிபதி சாய் இங்-வென் இன்று செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. ஆனால் தாங்கள் இறைமையுள்ள தனி நாடு என தாய்வான் உறுதியாகக் கூறி வருகிறது.

இந்நிலையில் தாய்வானை அச்சுறுத்தும் வகையில் அதன் வான்வெளியில் தனது விமானங்களை அடிக்கடி அனுப்பி அந்நாட்டின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் சீனா நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் பீஜிங்கிடம் இருந்து பெரிய அழுத்தத்தை தாய்வான் எதிர்கொண்டு வருகிறது. வெள்ளிக்கிழமை முதலான நான்கு நாட்களில் மட்டும் தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 148 சீன விமானப்படை போர் விமானங்கள் நுழைந்து வெளியேறியுள்ளன.

இந்நிலையில் சீனா திட்டமிட்டு பதட்டத்தை உருவாக்கி வருவதாக தாய்வானின் முக்கிய சர்வதேச ஆதரவு நாடான அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, சீனாவின் அச்சுறுத்தலை சா்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். இது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக அமையும். ஜனநாயகத்தின் மீதான சா்வாதிகாரத்தின் ஆதிக்கத்தை உணர்த்தும் வகையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது எனவும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார்.

தாய்வான் சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்க சாய் இங்-வென் மறுத்து வருவதால் அவரை பிரிவினைவாதி என சீனா விமர்சித்து வருகிறது.

ஆனால் தாய்வான் ஒரு இறைமையுள்ள சுதந்திர நாடு. அது எந்தவொரு நாட்டின் பகுதியும் அல்ல என சாய் இங்-வென் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் இராணுவ ரீதியான மோதலை விரும்பவில்லை. சீனா உட்பட அண்டை நாடுகளுடன் பரஸ்பரம் நன்மை பயக்கும் நல்லுறவையே விரும்புகிறது.

ஆனால் தாய்வானின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வோம் எனவும் சாய் இங்-வென் எச்சரித்துள்ளார்.

சிக்கல்களுக்குத் தீா்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனாவுக்கு சாய் இங்-வென் மீண்டும் அழைப்பு விடுத்தார். ஆனால் இவ்வாறான அழைப்புக்களை சீனா பலமுறை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE