பேஸ்புக் சமூக வலைத்தளம் மற்றும் அதன் செயலிகள் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ அதிகாரியான பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) குற்றஞ்சாட்டியுள்ளார்.
பேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில் திரட்டிய இரகசிய கோப்புகள் மூலம் அந்த நிறுவனத்தின் மோசமான வர்த்தக நோக்கத்தை வெளிப்படுத்தி அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பயனாளிகள், சமூக நலனைவிட இலாபத்தை மட்டுமே மனதில் கொண்டு பேஸ்புக் செயல்பட்டு வருவதாக 37 வயதுப் பெண்ணான பிரான்சிஸ் ஹாகன் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற குழு பேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இக்குழு முன்பாக பிரான்சிஸ் ஹாகன் ஆஜாராகி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் திரட்டுவதும், அவற்றை இலாப நோக்கில் பயன்படுத்தி வருவதும் முக்கிய தனியுரிமைப் பிரச்னையாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் தனது தளத்தில் வெறுப்பரசியல் கருத்துகளை கையாளும் விதம் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
இந்நிலையில், பேஸ்புக்கின் வர்த்தக நோக்கிலான மோசமான செயல்பாடுகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'வால்ஸ்டிரீட் ஜேர்னல்' (wall street journal) இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது.
தனது செயல்பாடுகளில் பல, பயனாளிகள் நலனுக்கு பாதகமாக அமைந்திருக்கின்றன எனத் தெரிந்திருந்தும் கூட வர்த்தக நோக்கில் பலன் அளிக்கும் என்பதற்காக அவற்றை பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த பத்திரிகை செய்திக்கட்டுரைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
பயனாளிகளின் எதிர்வினையைத் தூண்டும் கருத்துகளையே பேஸ்புக் இலாப நோக்கில் முன்னிறுத்தி வருவதாகவும் தகவல் வெளியானதோடு, பேஸ்புக்கின் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் பல இளம் பெண்கள் நலனுக்கு பாதகமாக அமைந்துள்ளதை ஆய்வு மூலம் அறிந்தும் கூட பேஸ்புக் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் அம்பலமானது.
பேஸ்புக் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் நிறுவனத்திற்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் 'வால்ஸ்டீரிட் ஜேர்னல்' இந்த தகவல்களை வெளியிட்டு வந்தது.
இந்த தகவல்களை வெளிப்படுத்தும் நபர் யார்? என்பது இதுவரை இரகசியமாக இருந்துவந்த நிலையில் பேஸ்புக்கில் பணியாற்றி பின் விலகிய பிரான்சிஸ் ஹாகன் எனும் பெண்தான் இத்தகவல்களை வெளிப்படுத்தி வருவது இப்போது தெரியவந்துள்ளது.
அவர் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் பேஸ்புக் தனது விதிமுறைகளை செல்வாக்கு மிக்கவர்களுக்காக தளர்த்திக் கொள்வதும் அம்பலமாகியுள்ளது.
பேஸ்புக் நம்பகத்தன்மை குழுவில் தாயாரிப்பு முகாமையாளராகப் பணியாற்றிய பிரான்சிஸ் ஹாகன், அந்த நிறுவன செயல்பாடுகளால் வெறுப்படைந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாகவும், அதற்கு முன் நிறுவனத்தின் இரகசிய ஆவணங்களை நகலெடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.