ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இருந்து வரும் மலேரியாவுக்கு தடுப்பூசியைக் கண்டறித்து மருத்துவ உலகம் மற்றொரு பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பால் நேற்று அங்கீகரிக்கப்பட்ட உலகின் முதல் மலேரியா தடுப்பூசி முதன்முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது.
கொடிய மலேரியா நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்று தருணமாக இந்தத் தடுப்பூசி அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்தின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக மலேரியா இருந்து வருகிறது. சிறுவர் மற்றும் குழந்தைகளின் மரணத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் நோயாக மலேரியா உள்ள நிலையில் இதற்கான தடுப்பூசி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கடும் முயற்சிகளுக்குப் பின்னர் மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக மலேசியா தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொஸ்குயிரிக்ஸ் (Mosquirix - RTS,S/AS01) என அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, கடந்த 2019-இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின் பின்னர் இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், ஆப்பிரிக்காவிலும் மற்றும் மிதமான மற்றும் அதிக மலேரியா தொற்று ஆபத்துள்ள பகுதிகளிலும் முதலில் இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
உலகில் முதல் முறையாக ஆப்ரிக்காவைச் சோ்ந்த சிறுவா்களுக்கு மலேரியா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் எனத் தெரிவித்துள்ளார்.
மலேரியாவைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மந்தமாகியிருந்த நிலையில், தடுப்பூசி வந்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.