ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களின் மசூதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50-க்கு மேற்பட்டோர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில், அபாட் மசூதியில் உள்ள மசூதியில் தொழுகைக்காக 300 வரையான மக்கள் கூடியிருந்த வேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத குழுவின் உள்நாட்டு அமைப்பாக கருதப்படும் ஐஎஸ் -கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம்களை சமய எதிரிகளாக கருதுகின்றனர்.
அதேநேரம் தலிபான்களை தீவிரமாக எதிர்த்துவரும் ஐ.எஸ்.கே தீவிரவாத குழு கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மசூதிகள், விளையாட்டுக் குழுக்கள், பாடசாலைகளை குறிவைத்து தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களில் தாலிபன்களுக்கு எதிராக அவர்கள் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காபூலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தாலிபன் தலைவர்கள் பங்கேற்ற ஓர் இறுதிச் சடங்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. நங்ஹர், குனார் போன்ற கிழக்கு மாகாணங்களில் சில சிறு சிறு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தப் பகுதி ஐ.எஸ். அமைப்பு முன்பு வலுவாக இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.