பொலிவியா விமானப்படை விமானம் பாண்டோ துறையில் உள்ள ஆகுவா டல்சின் அமேசான் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பொலிவிய சுகாதார அமைச்சின் நான்கு அதிகாரிகள் உட்பட ஆறு பேர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிபெரால்டா நகராட்சியில் இருந்து புறப்பட்ட ஏழு நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதியதாக பொலிவியன் பொலிஸ் துணைத் தலைமை அதிகாரி கேணல் லூயிஸ் கியூவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர் கூறினார்,
இந்த விமானத்தில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு-சிக்குன்குனியா ஒழிப்புத் திட்டத்தின் நான்கு அதிகாரிகள் இருந்தனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
ரிபரால்டாவிலிருந்து கோபிஜாவுக்கு சுகாதார அமைச்சின் குழுவை கொண்டு சென்ற விமானம் விபத்தில் சிக்கிய செய்தியை அறிவிப்பதில் வருந்துகிறோம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் கண்காணிப்பு மற்றும் பாரம்பரிய மருத்துவத்துறை துணை அமைச்சர் மரியா ரெனீ காஸ்ட்ரோ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டிற்கு மிக முக்கியமான சேவையாற்றிய அதிகாரிகளை நாங்கள் இழந்துவிட்டோம் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.