பொருட்களை ஏற்றும் கொள்கலன் வாகனத்துக்குள் ஆட்கடத்தல்காரர்களால் ஏற்றிச் செல்லப்பட்டவேளை கைவிடப்பட்டு சிக்கத் தவித்த 126 குடியேற்றவாசிகளை கௌதமாலா பொலிஸார் மீட்டனர்.
நூவே கான்செப்சியான் மற்றும் கோக்கேல்ஸ் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த ஓரிடத்தில் கடந்த சனிக்கிழமை வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் வாகனத்துக்குள் இருந்து ஆட்கள் கத்தும் சத்தத்தை கேட்டது. பொதுமக்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் கொள்கலனுக்குள் சிக்கித் தவித்த 126 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இவர்களை மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் செல்லப் பணம் வாங்கிய ஆட்கடத்தல்காரர்கள் அவர்களை கொள்கலன் லொறியுடன் வீதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாகக் கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 106 பேர் ஹெய்டியைச் சேர்ந்தவர்கள், 11 பேர் நேபாளம் மற்றும் 9 பேர் கானாவைச் சேர்ந்தவர்கள் என கௌதமாலா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் அகுவிலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு கொள்கலன் லொறி ஹோண்டுராஸில் இருந்து பயணத்தைத் தொடங்கியதாகத் தெரியவருகிறது என கௌதமாலா இடம்பெயர்வு விவகாரங்கள் தொடர்பான அதிகாரியான அலெஜான்ட்ரா மேனாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் மீண்டும் ஹோண்டுராஸுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என கௌதமாலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான இவ்வாறான பயணங்கள் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லும் பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் சிக்கித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை, மெக்சிகோவில் அமெரிக்க எல்லை அருகே 652 புலம்பெயர்ந்தோர் ஆறு கொள்கலன்களில் அடைக்கப்பட்டுக் கடத்தப்பட்டபோது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.