நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் பேரூந்து வீதியில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொலைதூர முகு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு (06:45 GMT) இந்த விபத்து இடம்பெற்றது.
பேருந்தின் முன் டயர் காற்றுப்போனதால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக முகு பிராந்திய அரச அதிகாரி ரோம் பகதூர் மஹத் கூறினார்.
இந்த பேருந்து தெற்கு பாங்கே மாவட்டத்தில் இருந்து முகு பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் பலியான 28 பேரில் உடல்களையும் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. அதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என ரோம் பகதூர் மஹத் கூறினார்.
விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். ஹெலிகப்டர்கள் உதவியுடள் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மோசமான வீதிகள், மோசமான வாகன பராமரிப்பு மற்றும் கவனக்குறைவு நேபாளத்தில் கொடிய போக்குவரத்து விபத்துகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
2019 ஆம் ஆண்டில் நேபாளத்தில் கிட்டத்தட்ட 13,000 வீதி விபத்துகளில் 2,500 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அரசாங்க புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.