ஐ.பி.எல். ரீ-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் டெல்லி அணியின் கனவு கலைந்தது.
டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி டெல்லி அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடி டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றிருந்தது.அதிகபட்சமாக ஷிகர் தவான் - 36, ஸ்ரேயாஸ் ஐயர் - 30 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் - வெங்கடேஸ் ஐயர் இணை சிறந்த ஆரம்பத்தை கொடுத்தது.
12.2 ஓவர்களில் 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் வெங்கடேஸ் ஐயர் 55 ஓட்டங்களை பெற்று ஆட்மிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ரானா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 125 ஆக இருந்த போது 46 ஓட்டங்களுடன் ஆட்மிழந்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.
3 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழப்பு தொடர் சரிவை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்து வந்த அணித் தலைவர் மோர்கன், ஷாகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து வெளியேறினர்.
இத்திடீர் சரிவின் காரணமாக ஆட்டம் பரபரபான நிலையை எட்டி டெல்லி அணியின் பக்கம் வெற்றியின் திசை மாறியது.
இந்நிலையில் ராகுல் திரிபாதி பொறுப்புடன் விளையாடி இறுதியில் கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
11 பந்துகளை சந்தித்து ஒரு 6 ஓட்டத்துடன் 12 ஓட்டங்களை பெற்று திரிபாதி ஆட்டமிழக்காது இருந்தார்.
பந்து வீச்சில் நோர்ட்ஜே, அஸ்வின், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
இதன் மூலம் ஐபிஎல் 14வது சீசன் இறுதிப் போட்டிக்கு 2வது அணியாக கொல்கத்தா அணி தேர்வாகியுள்ளது.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியுடன் மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா அணி கிண்ணத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை